
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தூமகூருவில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து தூமகூரு டவுனில் மதினா மசூதியின் அருகே முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கு நேற்று மதியம் தொழுகை முடிந்த பின் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மசூதி முன்பு கூடினர். அதில் மசூதியின் தலைவர் முகமது தஸ்தஹீர் பேசியதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்துள்ளனர். இந்தியா எங்களது தாய்நாடு. எங்கள் தாய் நாட்டுக்கு எதிராக நடைபெறும் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதலையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
இச்சம்பவத்திற்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மசூதி துணைத் தலைவர் சைபுல்லா கூறியதாவது, இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
இச்சம்பவம் மனித குலத்திற்கு எதிரான மிகக் கொடிய செயலாகும். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கூறியதாவது, எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் நிராயுதபானியாக சுற்றுலாவை கொண்டாட வந்த மக்களை தாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எங்களது மதம் யாரையும் கொள்ள அனுமதிக்கவில்லை. அந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.