நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பகுதியில் நவீன் குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்வர்தினி (27) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் ராமாவரம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

தன்வர்தினி திருமணத்தின்போது நவீன் குமாரிடம் தான் வருவாய் கோட்டாட்சியராக பொள்ளாச்சியில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். திருமணத்திற்கு பின் நவீன்குமார் வேலைக்காக கோவைக்கு சென்ற நிலையில் தன்வர்தினி பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார். அவர்கள் இருவரும் விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வந்து குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளனர்.

தற்போது அவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் நவீன் குமாரின் உறவினர் பொள்ளாச்சியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு தன்வர்தினி பற்றி கேட்டுள்ளார். அப்போது அங்குள்ளவர்கள் அந்த பேரில் இங்கே யாரும் வேலை செய்யவில்லை என்று கூறியவுடன், நவீன் குமாரிடம் அவர் நடந்ததை கூறினார்.

இதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த நவீன் குமார் தன்வர்தினியிடம் விசாரித்தனர். அதில் தன்னை சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு இட மாற்றம் செய்துவிட்டார்கள் என்று கூறினார். அவர் கூறியதை கேட்டதும், நவீன் குமார் சென்னைக்கு உண்மையை தெரிந்து கொள்வதற்காக சென்றார். அப்போது தன்வர்தினி அவரிடம் கொடுத்து வைத்திருந்த சான்றிதழ்களை நவீன் குமார் எடுத்து பார்த்தபோது அவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பது தெரிய வந்தது.

தன்னை திருமணம் செய்து கொள்வதற்காக தன்வர்தினி வருவாய் கோட்டாட்சியதாக வேலை பார்த்து வருகிறார் என்று பொய் கூறியுள்ளார் என்பதை நவீன் அறிந்து கொண்டதும் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தன்வர்தினியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அரசு பணிக்காக தேர்வு எழுதிக் கொண்டு வருவதாகவும், அதற்காக ஒரு நபருக்கு பணம் செலுத்திய நிலையில் அவர் கண்டிப்பாக வேலை வாங்கி தருவதாக நம்பிக்கை கொடுத்ததால் தன்வர்தினியின் குடும்பத்தினர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார் என்று நவீன் குமாரிடம் பொய் கூறியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.