அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட் சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று கூறினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிலர் அவரை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டனர். இதனால் அவர் அந்த வீடியோவை அழித்துவிட்டு மன்னிப்பும் கேட்டார். எனினும் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பனோலி 14 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருடைய இடைக்கால ஜாமீன் பற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது பனோலிக்கு ரூ. 10,000 பிணைத் தொகையை செலுத்தும் படி உத்திரவிடப்பட்டது. அதன்படி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பனோலிக்கு எதிரான புகாரில் எந்தவித குற்றத்திற்கான விஷயங்களும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் உத்திரவிடப்பட்டுள்ளது. கல்வி நோக்கத்திற்காக வெளிநாட்டு செல்ல வேண்டும் என அணுகினால் அது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனோலிக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ள சூழலில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.