
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று உள்ளது. இந்த சூலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல தொழிலாளிகள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். தற்போது செங்கலை தயாரித்து தூண்கள் அமைக்கும் பணி சூலையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு அந்த சுவர் அருகே குழந்தைகள் மற்றும் சில தொழிலாளிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சுவர் இடிந்து கீழே விழுந்தது. இதில் சுராஜ்(9), நந்தினி(5), விவேக்(9) மற்றும் நிஷா என்ற 3 மாத குழந்தையும் உயிரிழந்தனர்.
மேலும் கவுரி(5) என்ற சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அச்சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குழந்தைகள் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்த ஒரு புகார் எழுத்து பூர்வமாக அளிக்கவில்லை. அவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.