புதுச்சேரி மாநிலத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தங்களது கட்சி கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.

இதன் பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது,”சொன்னதை செய்யும் அரசாக எங்களது ஆட்சி உள்ளது. மேலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறைகள் எதுவும் இருந்தால் அரசுக்கு தெரிவிக்கப்பட்டால் நிச்சயம் அரசு சரிசெய்யும். இறைவன், சித்தர்கள், அப்பா பைத்தியசாமி ஆகியோர் அருளால் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி நடைபெற வேண்டும் என பலர் வலியுறுத்தி வருவதால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். முதல் கட்டமாக 11 தொகுதிகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடிய விரைவில் அனைத்து தொகுதிகளிலும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஆட்சியின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விழாவில் தெரிவித்தார்.