
மகாராஷ்டிராவில் கடந்த 58 மாதத்தில் தினந்தோறும் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது ஓரளவுக்கு உண்மைதான் என்று நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகரந்த் ஜாதவ் பாட்டீல் தெரிவித்துள்ளார். சட்டசபையில் என் சி பி. எம் எல் சி. சிவாஜிராவ் கார்ஜே கேள்வி நேரத்தின் போது இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் அமராவதி டிவிசனில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர்.
அதன்படி கடந்த ஆண்டு மரத்வாடா டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அகோலாவில் 68 விவசாயிகளும், வர்தாவில் 112 விவசாயிகளும், பீட் பகுதியில் 205 விவசாயிகளும், அமராவதி டிவிசனில் 1069 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சத்ரபதி சம்பாஜி நகர் டிவிசனில் 952 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 707 பேர் உதவி பெற தகுதி உடையவர்கள், 433 பேர் உதவி பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது. பீட் பகுதியில் 167 பேர் உதவி பெற தகுதியானவர்கள், 108 பேர் உதவி பெற்றவர்கள்.
அமராவதி டிவிஷனில் 441 பேர் உதவி பெற தகுதியானவர்கள் என்றும், 332 பேர் தகுதி பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஜால்னா மாவட்டத்தில் மந்தா தாலுகாவில் கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரை 13 பேர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்க உறுதி அளித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.