
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோந்திரி கிராமத்தைச் சேர்ந்த ஷெரீப் கான் (25) என்ற இளைஞர், தனது மனைவி மற்றும் மாமியார் தாக்கியதாகக் கூறி, மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோவும், எழுதிய தற்கொலைக் குறிபும் போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷெரீப் தனது மனைவி ராணி கானுடன் குடும்பத் தகராறு காரணமாக சண்டை போட்டுள்ளனர். இந்த தகவலை ராணியின் மைத்துனி ரேஷ்மா, தன் பெற்றோரிடம் கூறியதையடுத்து, ராணியின் தாய் சித்தாரா கான் மற்றும் தந்தை ஷபீர் கான் கோந்திரிக்கு வந்து, தங்கள் மகளுடன் சேர்ந்து ஷெரீப்பை கடுமையாக தாக்கினர். இதன்பின்னர், ராணி மற்றும் ரேஷ்மாவை ஷபீர் தன்னுடன் அழைத்துச் சென்றார். மேலும், ஷெரீப்பின் கடையை பூட்டி, சாவியை எடுத்துச் சென்றதாகவும் தெரிகிறது.
தாக்குதலால் மனமுடைந்த ஷெரீப், மூன்று நாட்கள் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. பக்ரீத் பண்டிகையன்று அவரது சகோதரர் ஃபெரோஸ் நமாஸ் செய்ய அழைத்தபோதும், “நான் வருகிறேன்” என கூறிவிட்டு வரவில்லை. சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர், ஷெரீப்பை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர். அருகில் இருந்த அறையில், அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பு மற்றும் தானாக எடுத்த வீடியோவும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக பைராட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்கொலைக் குறிப்பு மற்றும் வீடியோ முக்கிய ஆதாரங்களாக எடுக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அறிக்கையைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பைராட் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் கௌஷல் தெரிவித்தார். இந்த சோகமான சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.