மதுராவில் நடந்த ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தில் வழங்கப்பட்ட பஜ்ஜியை உட்கொண்ட பொதுமக்கள் அதிகாலை 1 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது  திங்கட்கிழமை மதுராவில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது இரவு நேர பூஜைக்குப் பின் உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் வழங்கப்பட்ட பஜ்ஜியை உட்கொண்டதால் உணவு விஷம்  (food poison) ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 120 பேருக்கு பாதிப்பு இதில் சுமார் 50 பேர் அதிகாலை 1 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அதோடு காவல் அதிகாரிகள் செய்த விசாரணையில் பஜ்ஜிக்காக பயன்படுத்தப்பட்ட பஜ்ஜி மாவு உள்ளூரில் உள்ள கடையிலிருந்து வாங்கப்பட்டது என்று தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் பேசிய போது அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பார்காம் சிங் என்பவர்; பஜ்ஜியை உட்கொண்ட சில மணி நேரத்தில் சிலருக்கு தலை சுற்றல், வாந்தி மற்றும் நடுக்கம் ஏற்பட்டது என்று கூறினார். இன்னொருவர் இதனால் எனது மனைவி நிற்க முடியாமல் மிகவும் பலவீனமாகிய நிலையில் மயக்கமடைந்தார் என்று தெரிவித்தார்.

அதன்பின் மருத்துவர் கூறுகையில் சுமார் 29 நோயாளிகள் வாந்தி மற்றும் தலை சுற்றல் காரணங்களுடன் அதிகாலை ஒரு மணி அளவில் மருத்துவமனைக்கு வந்தனர் என்று தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.