கர்நாடக மாநிலம் பல்லாரியைச் சேர்ந்த ரகு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர். முடி திருத்தும் கடையில் வழக்கமாக செய்யும் தலை மசாஜ் செய்யும் போது, மசாஜ் செய்யும் நபர் அவரது கழுத்தை திடீரென திருப்பியதால், அவரது நரம்பு கிழிந்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். மசாஜ் செய்த உடனேயே அவருக்கு கழுத்தில் கடுமையான வலி ஏற்பட்டது, ஆனால் அவர் அதை தற்காலிகம் என நினைத்து வீட்டுக்குச் சென்றார். சில மணி நேரங்களில், அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது, மேலும், இடது பக்கம் முழுவதும் செயலிழந்தது.

மருத்துவமனைக்கு செல்லப்பட்ட ரகுவை பரிசோதித்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீகாந்த சுவாமி, ரகுவுக்கு இயல்பான பக்கவாதம் அல்லாது, மசாஜின் போது கழுத்து நரம்பு கிழிந்ததாலேயே பக்கவாதம் ஏற்பட்டதாக உறுதி செய்தார். கழுத்து நரம்பு கிழிந்ததால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு, பக்கவாதம் ஏற்பட்டது. அவருக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் மருந்துகள் அளித்து சிகிச்சை கொடுக்கப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், அவருடைய முழுமையான குணம் பெற இரு மாதங்கள் சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.

மருத்துவர்கள் திடீரென கழுத்தை வேகமாக திருப்புதல் அல்லது திடீர் கழுத்தசைவுகள், இதுபோன்ற மோசமான நிலைகளை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரித்து, பயிற்சியில்லாத நபர்களால் மசாஜ் செய்ய வேண்டாம் என்றும், இது ஆரோக்கியத்துக்கு தீங்கானது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.