
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த சேலம் மேற்கு தொகுதியில் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்ததாக மருத்துவமனையில் அனுமதியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சேலத்தில் இன்று பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, நமது கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும். உடல் ரீதியாக, மனரீதியாக பூரணமாக குணமடைய வேண்டும் என நாம் எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்று கூறினார். இதற்கு அங்கிருந்த பாமக தொண்டர்கள் சிரித்து கரகோஷம் எழுப்பினர்.