
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நீலகிரியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கோவை மாவட்ட வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.