சென்னை நந்தனம் சிஐடி நகர் 4வது பிரதான சாலையில் மெக்கானிக் கடை அருகே உள்ள குப்பை தொட்டியில் நேற்று இரவு 9 மணி அளவில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மெக்கானிக் கடை உரிமையாளர் குப்பைத்தொட்டியை பார்த்தபோது பிறந்து சில நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பச்சிளம் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு குழந்தையை காப்பகத்தில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அதில் வயதான பெண்ணுடன் ஒரு இளம்பெண் வந்து கைக்குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு சென்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசி சென்ற இளம் பெண் யார்? என்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.