
கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், உணவை திருடும் குரங்குகள் பெரிய சிக்கலாக மாறியுள்ளன. குரங்குகள் மைதானத்திற்கு வந்து, கேமராமேன்கள் மற்றும் பார்வையாளர்களின் உணவுப் பொருள்களை திருடுகின்றன. இதனால், உ.பி கிரிக்கெட் சங்கம் (UPCA) விரைவாக நடவடிக்கை எடுத்து, லங்கூர் குரங்குகள் மற்றும் அவற்றை கையாளும் நிபுணர்களை பணியமர்த்தியுள்ளது.
இந்த லங்கூர் குரங்குகள் உணவு பொருள்களை திருட வரும் குரங்குகளை பயமுறுத்தி விரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் போட்டியை லைவ் கவரேஜ் செய்யும் கேமராமேன்கள், தங்கள் ஸ்னாக்ஸ் மற்றும் கூல் டிரிங்க்ஸ்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு பிரச்சினையாக மாறியதால், UPCA இந்த முயற்சியை எடுத்துள்ளது.
பொதுவாக கிரீன் பார்க் மைதானத்தை சுற்றி மக்களுக்கு இடையூறாக நிறைய குரங்குகள் இருக்கும். இதனை சரி செய்வதற்காக, லங்கூர் குரங்குகளின் பயன்பாடு தற்போதைய போட்டிகளின் போது ஒரு மாற்று தீர்வாகவும், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிசெய்யும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.