உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரின் ரூர்கி பகுதியில், ஒரு வயதான பெண் தன் கணவருடன் ஸ்கூட்டரில் வந்தபோது, திடீரென இரண்டு மர்ம நபர்கள் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மே 28, 2025 அன்று மாலை 6:44 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோவில்,  2 நபர்கள் ஒரு பைக்கில் வந்து, அந்தத் தம்பதியை கவனிக்கின்றனர். அவர்கள் நிறுத்திய ஸ்கூட்டரிலிருந்து பெண் இறங்கி  முன்னே செல்கிறார்.

அப்போது இருவரில்  ஒருவர் ஓடி வந்து வயதான பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை பறித்து விட்டுச் ஓடுகிறார். அதேசமயம் மற்றொருவர் பைக்கை எடுத்ததும் இருவரும் தப்பி செல்கின்றனர்.

வெறும்  22 வினாடிகளில் இந்த சம்பவம் நடந்து முடிந்துவிடுகிறது. முழுமையாக திட்டமிடப்பட்ட இந்த கொள்ளை முயற்சியில், பறிக்கப்பட்ட சங்கிலியின் மதிப்பு இன்னும் தெரியவில்லை. ஆனால், அந்தத் பெண் மனமுடைந்து நிற்பது வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பொதுமக்கள் இந்த செயலை கண்டித்து, கொள்ளையர்களை உடனடியாக பிடித்து தண்டிக்க வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற செயின் பறிப்புகள், குறிப்பாக வயதான பெண்களை குறிவைத்து நடத்தப்படுவது, பொதுமக்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. . தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.