கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரியூர் பகுதியில் மாதா கோவில் தேர் பவனி விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கு பத்மா என்ற பெண் தனது குடும்பத்தினரோடு வந்திருந்த நிலையில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த இளம்பெண் பத்மாவிடம் “என் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் வருகிறேன்” என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் பத்மா குழந்தையின் தாய் வரும் வரை காத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் நீண்ட நேரமாக தாய் வராததால் சந்தேகமடைந்த பத்மா காவல் நிலையத்தில் குழந்தையுடன் சென்று நடந்ததை கூறினார். அவர் கூறியதை கேட்டு காவல்துறையினர் குழந்தைகள் நல குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குழந்தைகள் நல குழுவினர் பிறந்து 2 நாட்களே ஆன அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பச்சிளம் குழந்தையின் தாயை தீவிரமாக தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.