இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் தாக்குதலில் காசா பகுதியில் வாழும் மக்கள் அடிப்படைத் தேவைகள் எதுவும் கிடைக்காமல் பெண் குழந்தைகள் உள்ளிட்டோர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்தப் போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. அதன்படி நீண்ட முயற்சிக்கு பின் கடந்த டிசம்பர் மாதம் முதல் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இது குறித்து இருதரப்பு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதனால் காசாவில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஹமாஸ் பிடியின் கீழ் இருக்கும் அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்க இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்க்கோ ரூபியா அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். ஜெருசலேமில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூவை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “ஹமாஸ் அதிகாரத்தில் உள்ளவரை சமாதானம் என்பது சாத்தியமற்றது. எனவே ஹமாஸ் அமைப்பு முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும்” என கூறினார்.

இதனை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறியதாவது,”காசா போர் தொடர்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் பொதுவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். ஹமாஸ் அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். இல்லையெனில் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும். ஹமாசின் ராணுவத்திறன் மற்றும் அரசியல் ஆட்சியை காசாவில் இருந்து முழுவதுமாக அழிக்க வேண்டும். எங்களது அனைத்து பிணைக் கைதிகளையும் மீட்டு வீட்டிற்கு அழைத்து வருவோம். காசா ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம். இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் போர் நிறுத்தம் மிகவும் பலவீனமாக உள்ளது. கைதிகளை விடுவிக்கும் பரிமாற்றத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.”என அவர் தெரிவித்தார்.