தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகளிடம் வாகன சோதனை நடத்த எஸ்பி உத்தரவிட்டார்.

அதன்படி பல்லாக்கு ரோடு சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்ததால் அவரை விசாரித்த காவல்துறையினர் அவரிடமிருந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவர் கொண்டு சென்றது தெரிய வந்தது. அவரிடமிருந்த 24 கிலோ 250 கிராம் புகையிலை பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்த நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று காவல் துறையினர் ஏரல் பகுதியில் உள்ள டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஜான் மற்றும் அவருடைய மகன் கரீம் கான் (35), இஸ்மாயில் கான் (38) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 கிலோ புகையிலை பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்த நிலையில் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.