தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மகாவிஷ்ணு என்பவர் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையாக மாறிய நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பல்வேறு விதமான முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை, வெளி ஆட்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கத்த தடை, ஆசிரியர்கள் மதிய உணவு சாப்பிட வெளியே செல்வதற்கு தடை போன்ற பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மட்டும்தான் அறிவுரை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் போலியாக மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் காட்டியது சர்ச்சையாக மாறிய நிலையில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறித்து அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. இப்படி பல்வேறு உத்தரவுகள் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த வேண்டும் என முன்னதாக உத்தரவு போட்டிருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 17,810 அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த ஆய்வின் போது மாணவர்கள் இடையே கற்றல் மற்றும் கற்பித்தல் திறன் கேட்டறியப்பட்டதாகவும் அதற்கு தகுந்தார் போன்று நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.