
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறலத்துறை உருவாக்கப்பட்ட நோக்கமே 1818 ஆம் ஆண்டு திருக்கோவில்களுக்காக முன்னோர்கள் திருக்கோவிலுடைய அன்றாட விஷேசங்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக…. நன்கொடையாக அளித்த சொத்துக்கள் தவறான வழியில் செல்கிறது, திரு கோவிலுக்கு வருகின்ற வருமானங்கள் தவறான வழியில் போகிறது என்பதை அன்றைய ஆட்சியாளரிடம்எடுத்து கூறியதற்கு இணங்க,
1818ஆம் ஆண்டு ஒரு கமிஷனை அமைக்கின்றார்கள். அதன் தொடர்ச்சியாக 1917 ஆம் ஆண்டு ஒரு அரசாணை பிறப்பிக்கப்படுகின்றது. நீதி கட்சி காலத்தில் 1927 ஆம் ஆண்டு திருக்கோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறார்கள். அதன் தொடர்ச்சியாக 1951 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை சட்டங்கள் உருவாக்கப்படுகிறது.
பிறகு நீதிமன்றங்களுக்கு இந்த சட்ட முன்வடிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறபோது, இறுதியாக 1959ஆம் ஆண்டு நீதிமன்றங்களினுடைய ஒரு சில நீக்கங்களுக்கு உட்பட்டு இந்து சமய அறநிலைத்துறை சட்டம் உருவாக்கப்படுகிறது. அதன் பிறகு 1960 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு கமிட்டியின் பரிந்துரை படி இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் ஒரு அறிக்கையை தருகின்றார்கள்.
இப்படி அந்த காலத்தில் பரம்பரை அறங்காவலராக இருந்தவர்கள், தவறான முறையில் திருக்கோவில்களின் சொத்துக்களையும்… திருக்கோவிலுடைய வருமானங்களையும் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக தான் உருவாக்கப்பட்ட சட்டம் இந்து சமய அறநிலைத்துறை 1959 ஆம் ஆண்டு சட்டம். அந்த சட்டத்தின்படி புதிதாக பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் எண்ணற்ற சாதனைகளை நிறைவேற்றிக் இருக்கின்றோம். ஆட்சிக்கு வந்தவுடன் குறைகள் பதிவிடுக என்ற திட்டத்தை கொண்டு வந்தோம்.
தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற திருக்கோயில்களில் குறைகளை பதிவிட்ட உடன் சம்பந்தப்பட்ட பகுதியினுடைய இணை ஆணையாளர்களை அனுப்பி அந்த குறைகளை நிறைவு செய்கின்ற பணிகளை மேற்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக அந்த துறைக்கு சம்பந்தப்பட்ட திருக்கோவிலுடைய நாலு கோடி பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஸ்கேன் செய்கின்ற… பதிவிறக்கம் பணிகளை மேற்கொண்டோம். அந்தப் பணிகள் இன்றைக்கு முழுவதுமாக நிறைவுற்று, அந்தந்த திருக்கோவில்கள் உடைய EO-க்கள் அந்த திருக்கோவில்கள் உடைய ஆவணங்களை பதிவிறக்கம் செய்கின்ற பணி நடந்து கொண்டு இருக்கின்றது.
48 முதுநிலை கோயில்களை ஒருங்கிணைத்து… அந்த 48 முதுநிலை கோயில்களுக்கும் சிசிடிவி பொருத்தப்பட்டு, அதை இந்து சமய அறநிலைத் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து, அந்த திருக்கோவில்களில் நடைபெறுகின்ற அனைத்து வழிபாடுகளையும் கண்காணித்து, அதில் குறைகள் இருக்குமானால் உடனடியாக சம்பந்தப்பட்ட இணை ஆணையருக்கு தெரிவித்து அந்த குறைகளை நிவர்த்தி செய்கின்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை உயர்மட்ட செயல்திட்ட குழு என்பது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தலைவராக கொண்டு புதிதாக அமைக்கப்பட்டது.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மாவட்டங்களிலே இருக்கின்ற சிறிய கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட வேண்டிய பணிகள் துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக 38 வருவாய் மாவட்டங்களுக்கு அறங்காவலர்களை முழுமையாக நியமித்த ஆட்சி மாண்புமிகு தமிழக முதல்வருடைய ஆட்சி. அதேபோல் திருக்கோயில் சார்பில், 10 கலை கல்லூரிகள், ஒரு ஐ.டி.ஐ, அதேபோல் 27 பள்ளிக்கூடங்களை சிறப்பாக நிர்வாகிப்பதற்காக உயர் மட்ட கல்விக் குழுவை மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணையின் படி உருவாக்கி இருக்கின்றோம்.
அந்த வகையில் திருக்கோயில் படிக்கின்ற 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ செல்வங்களுக்கு உயர்தர கல்வியையும், அவர்களுடைய அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றி வருகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதே போல் திருவிழா காலங்களில் உதாரணத்துக்கு பழனி என்றால், தைப்பூசம், சூரசம்ஹாரம், கந்த சஷ்டி, என்றால் திருச்செந்தூர், அழகர் ஆற்றிலே இறங்குவது மதுரை அதேபோல் மகா தீபம் என்று சொல்லப்படுகின்ற நம்முடைய திருக்கார்த்திகை மாதத்திலேயே நடைபெறுகின்ற திருவண்ணாமலை தீபம் என்றாலும் சரி, அதேபோல் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறக்கப்படுகின்ற நிகழ்ச்சி என்றாலும் சரி.
இதுபோன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற அந்த விழாக்களை முன்கூட்டியே அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து…. அந்த திருவிழாவிற்கு தேவைப்படுகின்ற குடிநீர், கழிவுநீர் வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து சிறப்பான நிகழ்வுகளை நடத்திக் கொண்டு வருகின்றோம். அண்மையில் நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் சுமார் 8 லட்சம் பேர் அன்று ஒரே நாளில் கூடினார்கள். நிகழ்ச்சி நடைபெற்ற மொத்த திருக்கல்யாணத்தையும் சேர்த்து அந்த எட்டு நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த திருவிழாவில் பங்கேற்றார்கள்.
அதேபோல் அந்த திருக்கோவிலில் நடைபெறுகின்ற திருப்பணிகள் காரணமாக இடையூறுகள் எல்லாம் கடந்து 26 இடங்களில் தற்காலிக செட் அமைத்து, 35 ஆயிரம் பேர் தினமும் சஷ்டியில் விரதம் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இத்தனை லட்சம் மக்கள் கூடிய அந்த இடத்தில் ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை. ஒரு செயின் பறிப்பு கூட நடைபெற்றதாக புகார் இல்லை. மக்கள் நிகழ்ச்சி முடிந்து திரும்ப செல்வதற்கும், நிகழ்ச்சிக்கு வருவதற்கும் போக்குவரத்து சீராக செயல்பட்டது.
எந்தவிதமான புகாரும் இல்லாத நிலையில் இந்த திருவிழாக்களை நேர்த்தியாக நடத்தி வருகின்ற ஆட்சி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடைய ஆட்சி. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் வரைவு திட்டம் என்பதை ஏற்படுத்தி மாஸ்டர் பிளானில் 15 திருக்கோவில்களுக்கு இன்றைக்கு வரை வரைவு ஏற்படுத்தி இருக்கின்றோம். 1462 கோடி ரூபாய் செலவில் வரைவு திட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்தார்.