உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அசம்கர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கௌடியா என்ற கிராமத்தில் 2000 முஸ்லிம்களும் 200 இந்துக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் வசித்து வரும் விவசாயியான இந்து மதத்தைச் சேர்ந்த குலாப் யாதவ் என்பவர் ரமலான் மாதத்தில் தினமும் இரவு ஒரு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தட்டி அவர்களை எழுப்பி விடுகிறார். அதாவது ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் சகர் மற்றும் தொழுகைக்காக அதிகாலை நேரத்தில் எழும்புவார்கள்.

அவர்கள் தூங்கி விடக்கூடாது என்பதற்காக குலாப் யாதவ்  கடந்த 48 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் அவர்களின் வீட்டின் கதவை தட்டி எழுப்பி விடுகிறார். இந்த சேவையை குலாப் யாதவியின் தந்தை கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ரமலான் மாதத்தின் போது ஒவ்வொரு வருடமும் இந்த சேவையை செய்து வருகிறார்கள். இந்த சேவையின் மூலம் தனக்கு மனநிறைவு கிடைப்பதாக குலாப் யாதவ் கூறியுள்ளார். மேலும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிரச்சினைகள் நடைபெறுவதாக சில தகவல்கள் வந்தாலும் கூட இந்து மற்றும் முஸ்லிம் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக இந்த சம்பவம் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கூறுகிறார்கள்.