
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்பட உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை கனகலட்சுமியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்தி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சென்னை ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியை திருமிகு.கனகலட்சுமி அவர்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ளார்!
திருமிகு.கனகலட்சுமி அவர்கள் “தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்” எனும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் மாணவர்கள் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளார். மேலும் தமிழ் பணியினைத் தொண்டாக கருதி பணியாற்றி வருகிறார்.
இப்பணியினைப் பாராட்டி Croydon Tamil Sangam இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இவரை கெளரவிக்க உள்ளது. தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.
தமிழால் உயர்ந்துள்ள ஆசிரியை திருமிகு.கனகலட்சுமி அவர்களுக்கு தமிழனாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.