
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சலேட் நகரை சேர்ந்தவர் சுபித் (22). இவர் பி.எஸ்சி பயோ டெக்னாலஜி பட்டப்படிப்பு முடித்துள்ளார். தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியை சேர்ந்தமாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் கல்லூரி காலங்களில் நெருக்கமாக காதலித்து வந்துள்ளனர். அதனால் காதலி தன்னை தான் திருமணம் செய்து கொள்வார் என சுபித் உறுதியாக இருந்தார். ஆனால் கடந்த வாரம் அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுபித்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி தேற்றி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுபித் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக சுபித்தை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சுபித் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சுபித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சுபத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி வேறொரு நபரை திருமணம் செய்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.