சமூக வலைத்தளங்களில் சமீப காலங்களாக ஒவ்வொரு சம்பவங்களும் ட்ரண்டாகி வருகிறது. அதே போன்று தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “ஏங்க கூமாப்பட்டிக்கு வாங்க…” என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது கூமாபட்டி என்ற கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

அந்த கிராமத்தில் உள்ள ஒரு நபர் தனது இன்ஸ்டா ஐடி மூலம் தங்களது ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது வீடியோக்கள் ஃட்ரெண்டான நிலையில் பலரும் கூமாபட்டி ஊருக்கு படையெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் கூமாபட்டி குறித்து விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது,

உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து… நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் ‌! எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன்.
போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்.. கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில்,இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர்.
மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும். அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து ‌எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் ‘ரீல்’ஸ்காக மட்டுமே‌!
மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள‌இடம். எதிர்காலத்தில் இது‌ கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!  என தெரிவித்திருந்தார்.