ஜார்கண்ட் மாநிலத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் கனமழை பெய்து கொண்டே இருந்தது. அப்போது ஏற்பட்ட பலத்த காற்றால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இந்நிலையில் பல இடங்களில் மின்தடை பாதிப்பு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் சிங்கம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சுற்றிலும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பள்ளியில் இருந்த மாணவர்கள் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களை ஆசிரியர்கள் உடனடியாக பள்ளியின் மேல் மாடியில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

சுமார் 162 மாணவர்களுடன் ஆசிரியர்கள் வெளியேற முடியாமல் இரவு முழுவதும் மாடியிலேயே இருந்த நிலையில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி இன்று காலை 5:30 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு  படையினர் 162 மாணவர்களை கிராம மக்களின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டனர்.

மேலும் காவல்துறையினர் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பள்ளியில் இருந்த மாணவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.