
மத்திய பிரதேச மாநிலத்தில் பத்வார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு இந்திரகுமார் திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவருக்கு 45 வயது ஆகும் நிலையில் திருமணம் ஆகாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
அப்போது கடந்த மே மாதம் அருகிலுள்ள கிராமத்தில் ஒரு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அந்த சொற்பொழிவில் கலந்து கொண்ட இந்திரகுமார் தன்னிடம் 18 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் தனக்கு கல்யாணம் ஆகவில்லை. என்னையும், எனது சொத்தையும் கவனித்துக் கொள்வதற்கு ஒரு மணப்பெண் வேண்டும் என்று வெளிப்படையாக கூறினார்.
அவர் கூறியதை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்த நிலையில், அவரை கேலி செய்துள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து கடந்த 25 நாட்களாக அவரை காணாததால் கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேடி வந்த போது குஷி நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள புதரில் இருந்து அவரது உடலை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சாஹிபா பானு என்ற பெண் குஷி திவாரி என்ற பெயரில் இந்திர குமாரிடம் பழகி வந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையேயான பழக்கம் காதலாக மாறி உள்ளது. அதன் பின் சாஹிபா தனது கூட்டாளிகளுடன் இந்திர குமாரை உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூருக்கு வரும்படி கூறியுள்ளார்.
அதற்கு இந்திர குமாரும் அவரை நம்பி கோரக்பூருக்கு சென்றார். அங்கு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சாஹிபா இந்திர குமாருடன் உள்ள சொத்திற்கு ஆசைப்பட்டு மோசடி கும்பலுடன் சேர்ந்து அவரை கொலை செய்து உடலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதரில் மறைத்து வைத்து சென்றது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சாஹிபாவை கைது செய்த காவல்துறையினர் இந்திரகுமாரின் கொலையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.