ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் அதிமுக தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, இரட்டை இலை இருந்தும் அதிமுகவிற்கு இவ்வளவு மோசமான தோல்வி கிடைத்திருக்கிறது.  இரட்டை இலை இல்லாமல் இருந்தால் அதிமுகவின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

அதிமுக பழனிசாமியின் பிடியில் இருக்கும் வரை கட்சி மேலும் மோசமான நிலைக்கு தான் செல்லும். மத்திய அரசின் ஆதரவு இருந்தாலும் தொண்டர்களை தன் வசப்படுத்தியும் தலைமை பதவியை அடைந்திருக்கின்றார். இந்த பதவி இது உண்மையான தலைவர் பதவி அல்ல. துரோகத்தின் மூலமே இந்த பதவியை அவர் அடைந்துள்ளார். அதற்கு காலம் தக்க தண்டனை கொடுக்கும். திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் திமுகவின் வெற்றி பற்றி பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது, ஈரோடு கிழக்கில் திமுக பெற்ற வெற்றி என்பது வழங்கப்பட்டது அல்ல வாங்கப்பட்டது. அனைத்திலும் ஊழல் இருக்கிறது. ஈரோடு கிழக்கில் ஒருவருக்கு  ரூ.25,000 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிகாரத்தின் மூலமாக வெற்றியை வாங்கி விட்டார்கள். இது தவறான முன்மாதிரி தேர்தல் ஆட்சி என கூறியுள்ளார்.