
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுகிறது. தனிநபர் விதிமுறைகளுக்காக நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது? எஃப் ஐ ஆர் பதியப்பட்ட பிறகு அமலாக்க துறைக்கு அங்கு என்ன வேலை? கூட்டாட்சி அமைப்பையே அமலாக்கத்துறை சிதைத்துள்ளது என கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் விவகாரத்தில் நீதிமன்றம் தங்களுக்கு நியாயம் வழங்கி உள்ளதாக அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு மத்திய அரசு அனைவரையும் மிரட்டுகிறது.
தனிநபர் செய்யும் குற்றத்திற்காக ஒரு அரசு துறையை குற்றம் சாட்டுவதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எங்களுக்கு நீதிமன்றம் தான் புகலிடம். இன்று நீதிமன்றம் எங்களுக்கு நியாயம் வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.