
ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் கடற்படை அதிகாரியான வினய் நார்வாலும் ஒருவர். இவருக்கு ஹிமான்ஷி என்ற பெண்ணுடன் கடந்த 16ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் இருவரும் சுற்றுலாவிற்காக காஷ்மீருக்கு சென்றிருந்தனர்.
அப்போதுதான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வினய் நார்வால் கொல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று அவரது 27ஆவது பிறந்தநாள் என்பதால் ஹரியானா பகுதியில் உள்ள கர்னூல் பகுதியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் வினயின் மனைவி ஹிமான்ஷி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அதில் கூறியதாவது, “காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும் யாரும் செயல்பட வேண்டாம், அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். எங்களுக்கு அமைதி மட்டும் தான் வேண்டும். அதே சமயத்தில் என் கணவரின் மரணத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சிலர் இஸ்லாமிய மக்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் வெளியிட்டு வரும் நிலையில் இப்படியொரு கருத்தை அவர் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.