
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு இறங்கிய பிறகு கலைஞர் கின்னஸ் என்ற நூலை வெளியிட்டார். அமைச்சர் துரைமுருகன், மா. சுப்ரமணியன் எல்லோரும் இணைந்து வெளியிட்டு பேசினார்கள். நான் இலக்கியம் பேசினேன் ஆனால் அவர்கள் முழுவதும் அரசியல் பேசினார்கள். உங்களுக்கு வந்தா ரத்தம்? எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நான் பேசியது தவறு என்றால் நீங்கள் பேசியது எப்படி சரி ஆகும்.
இதற்கிடையில் செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு மட்டும் தான் கண்டனம் தெரிவித்துள்ளார்களே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான் எனக்கு மட்டும்தான் கண்டனம் தெரிவிக்க முடியும், நான் மட்டும்தான் அவர்களுக்கு பிரச்சனையாக தெரிகிறேன். அரை நாள் செலவழித்து மேடையில் ஏறி நான் ஏன் பேச வேண்டும். பேசினால் ஒரு பிரச்சனை உருவாகும், பிரளயம் ஏற்படணும், களங்கம் ஏற்படணும் சும்மா போய் நான் ஏன் பேச வேண்டும். அது வேற யாராவது பேசுவார்கள். தமிழ் தேசம், தமிழ் தேசியம் என புத்தகத்தில் உள்ளது.
தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் மகன் இதைக்கூட பேசவில்லை என்றால் நான் கைத்தடி வைத்திருக்கிறேனா? இல்லை நான் துப்பாக்கி வைத்திருக்கிறேன். கைத்தடி வைத்திருக்கிறவன் தட்டி தட்டி நடப்பான், நான் துப்பாக்கி வைத்திருக்கிறேன். இரண்டு குண்டாவது வெடிக்க வேண்டும் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சியில் நான் ஏன் கலந்து கொள்ள வேண்டும். இப்படி நடக்கும் என்று தெரிந்துதான் நிகழ்ச்சி நடந்திருக்கு, இல்லையென்றால் என்னை ஏன் கூப்பிட்டு வெளியிடனும். எல்லோரும் அரசியல் தான் பேசுகின்றனர், நான் பேசியது தான் இங்கு பிரச்சினையாக இருக்கிறது என்று கூறினார்.