மழைக்காலம் வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்கள் ஏற்படுவது சகஜம். இந்த காலகட்டங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் புதுவிதமான நோய் தொற்று கிருமிகள் பரவி வருகின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பருவமழையால் பலருக்கும் உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல பிரச்சனையால் மருத்துவமனைக்கு 40% பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் ஜீரண மண்டலத்தை பாதிக்கும் “இகோலி” எனப்படும் பாக்டீரியா தொற்று நோயால் பரவுகிறது. இந்த பாக்டீரியா தொற்று அசுத்தமான இறைச்சிகள், காய்கறி, பழங்கள், குடிநீர், பால் போன்றவற்றின் மூலம் உடலுக்குள் புகுந்து நோய்க்கு தொற்றை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று மதுரை சுற்றுவட்டாரங்களில் 5 முதல் 17 வயது உட்பட்ட சிறுவர்களை “வாக்கிங் நிம்மோனியா” என்ற நோய்க்கிருமி தாக்கி வருகிறது. காய்ச்சல், சளியென மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் சிறுவர்களில் அதிகமானோர் வாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய்க்கிருமிகள் நோய் தொற்று உள்ளவர்கள் இரும்பும் போதும், தும்பும் போதும் காற்றின் வழியே பரவுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, மழைக்காலங்களில் நோய்க்கிருமிகள் தாக்குவது வழக்கமான ஒன்றாகும். மருத்துவமனைகளில் மழைக்கால நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. மேலும் சுகாதாரத் துறையின் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று குறித்து பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.