தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் நடத்தினர். மேலும் அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் உடல் உறுப்பு தானம், ரத்ததானங்கள் செய்துள்ளனர்.

இதனை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பேனர்கள், போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பல நலத்திட்ட உதவிகள் செய்தனர்.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே காட்டுச் செல்லூர் பகுதியில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதனை திமுக நிர்வாகிகள் கிழித்ததோடு, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அந்தத் தாக்குதலில் தவெக நிர்வாகிகள் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுகவைச் சேர்ந்த சேர்மன் ராஜவேலு மற்றும் அவரது மகன் பிரபாகரன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த ஆண்டு மட்டுமல்லாமல் கடந்த பல ஆண்டுகளாகவே தலைவர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை அவரது தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த ஆண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க விடாமல் காவல்துறையினர் தொண்டர்களுக்கு அதிக தொல்லை கொடுத்து வருகின்றனர். கோவில் போன்ற இடங்களில் அன்னதானம் வழங்கக் கூடாது என இடையூறு செய்கின்றனர்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேலும் உளுந்தூர்பேட்டையில் உள்ள எங்களது கட்சி நிர்வாகிகள் மீது திமுகவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுதான் இன்றைய தமிழ்நாடு அரசின் போக்கு என கூறியுள்ளார்.