பீகார் மாநிலம் சிவன் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் பிரசாந்த் குமார்(34) என்பவர் லக்னோ-கான்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் தனது இருக்கையில் 11 வயது சிறுமி உட்காருவதற்கு இடம் கொடுத்துள்ளார். அந்த சிறுமியின் தாய் சற்று விலகி நின்றபோது பிரசாந்த் குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

உடனே சிறுமியின் குடும்பத்தினரும் பிற பயணிகளும் சேர்ந்து பிரசாந்த் குமாரை சரமாரியாக தாக்கி ரயில்வே போலீஸ் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் படுகாயமடைந்த பிரசாந்தின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.