
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 274 பயணிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை அடையாளம் காண அகமதாபாத் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். அப்போது 20 மர சவப்பெட்டிகளுடன் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
அவரது பெயர் நிமேஷ் வகேலா(40). அவர் அகமதாபாத்தை சேர்ந்த சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளி. அந்தத் தொழிலில் கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக கூறினார்.
சராசரியாக ஒரு நாளைக்கு 7 சவப்பெட்டிகள் தயாரிக்கும் அவருக்கு விமான விபத்தை தொடர்ந்து 100 சவப்பெட்டிகளுக்கான அவசர ஆர்டர் பெற்றுள்ளார்.
அவரிடம் பேட்டி எடுத்தபோது அவர் கூறியதாவது, “நாட்டின் எல்லைகளையும், விசாக்களையும் பற்றி பேசுகிறார்கள். ஆனால் சவப்பெட்டிகளுக்கு பாஸ்போர்ட் தேவை இல்லை. மரணத்தில் எல்லாம் ஒரே மாதிரி தான்”. அவர் வெளிநாடுகளுக்கு உயிரிழந்தவர்களின் உடல்களை அனுப்ப சவப்பெட்டிகளை வழங்குவது வழக்கமானதாகவும், ஆனால் தற்போது இது ஒரு வித்தியாசமான உணர்வாக தோன்றுகிறது எனவும் கூறினார்.
மேலும் அவர் சவப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்த போதிலும் அதன் விலையை உயர்த்தவோ அல்லது முன்கூட்டி பணம் வாங்கவோ மறுத்துள்ளார். இது குறித்த அவரிடம் கேட்டபோது இது லாபத்திற்கான நேரம் அல்ல என கூறிவிட்டு பட்டரையை நோக்கி சவப்பெட்டிகளை தயாரிக்க சென்றார்.