
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகவும் அநியாயமான ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயமான தொகுதி மறுவரை குறித்து பேசுகிறார். திமுக அரசின் தோல்விகளையும் மோசடிகளையும் மறைப்பதற்காக இது போன்ற கவனத்தை சிதறடித்து விஷயங்களை பயன்படுத்துவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்.
தொகுதி மறு சீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய அமைச்சரிடம் எடப்பாடியார் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் நிலை வந்தால் அதை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் என்று எடப்பாடி கூறியிருக்கிறார்.
அதேபோன்று அடிமை அமைச்சர் ரகுபதி தொடர்ந்து வார்த்தைகளால் வாந்தி எடுத்து வைத்ததை எல்லாம் மக்கள் பொருட்படுத்த தயாராக இல்லை. மதுரை திமுக பொதுக் குழுவில் மன்னராட்சி வழிவகுக்க உதயநிதிக்கு துணை நிற்போம் என்று தீர்மானம் போட்டார்கள்.
அதில் திருப்தி அடையாத ஸ்டாலின் தனக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை கேட்டு அழுத்தம் கொடுத்ததாக பத்திரிக்கையில் செய்தி வருகிறது. இதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காகத்தான் இல்லாத பிரச்சினையை பூதாகரமாக்கி கானல் நீர் போல் காட்சிப்படுத்த நினைக்கிறார்கள். நம்மை சூழ்ந்து இருக்கின்ற இந்த ஆபத்தை மீட்டு எடுக்கக் கூடிய ஒரே சக்தி எடப்பாடி தான். தமிழகத்தில் மன்னராட்சியை ஒழித்து எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி வளர செய்வோம் என்று கூறினார்.