
உலகம் முழுவதும் இணைய பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல், பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட 1,600 கோடி கணக்கு தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது ‘டார்க் வெப்’ எனப்படும் மறைமுக இணையத்தில் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இதனால் உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்கள் ஆபத்தில் உள்ளனர்.
இந்த விவகாரத்தில், ‘ஆப்பிள்’, ‘கூகுள்’, ‘மைக்ரோசாப்ட்’, ‘அமேசான்’ போன்ற முன்னணி இணைய நிறுவனங்களின் பயனர் கணக்குகள் தாக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள், ஆன்லைன் சேவைகள், செயலிகள் போன்றவற்றில் இருந்து திருடப்பட்ட இந்த விபரங்கள், மொத்தம் 30 தனித்தனி தரவுத்தொகுப்புகளாக கசிந்துள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் கோடிக்கணக்கான பாஸ்வேர்டுகள் அடங்கியுள்ளதாக சர்வதேச சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனங்கள் ‘Cybernews’ மற்றும் ‘Keeper Security’ தெரிவித்துள்ளன.
இந்த மிகப்பெரிய தரவுசேகரிப்பு திருட்டு காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பயனர்கள் ஆபத்தில் உள்ளனர். எனவே, இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் உடனடியாக தங்கள் பாஸ்வேர்டுகளை மாற்ற வேண்டும். மேலும், இரண்டு அடுக்குத் துல்லியத்துடன் பாதுகாப்பு அமைப்புகளைக் கட்டாயமாக செயல்படுத்துமாறும், வல்லுநர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம், இணையத்தில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. பயனர்கள் எப்போதும் பாதுகாப்பான பாஸ்வேர்டுகளை தேர்வு செய்து அவற்றை அடிக்கடி மாற்றும் பழக்கத்தைப் பெற வேண்டும் என்பதே வல்லுநர்களின் வலியுறுத்தல்.