
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீர் பிரச்சனை என்பது பல வருடங்களாக நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் குமாரசாமி காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது, காவிரி விவகாரத்தில் அரசியல் கலக்கக்கூடாது. இதில் சட்டப் போராட்டங்கள் நிச்சயம் உதவாது.
இந்த பிரச்சனைக்கு ஒரே ஒரு தீர்வு விட்டுக் கொடுத்து போவது மட்டும் தான். இதனை இரு மாநில விவசாயிகளும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் அதற்கு மழை பொழிய வேண்டும். மழை பெய்ய வருண பகவான் தான் அருள் புரிய வேண்டும் என்று கூறினார்.