
பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வியாளர் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பள்ளி மாணவர்களிடம் சாதிய மற்றும் சமூக வேறுபாடுகள் உணர்வுகள் அடிப்படையில் வன்முறைகள் உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். நல்லிணக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்க்க வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறளை மையமாகக் கொண்டு நன்னெறி வகுப்புக்கள் வாரம் தோறும் நடத்தப்பட வேண்டும். மேலும் இலக்கியம், வினாடி வினா, நூலகம் வானவில் மன்றம் உள்ளிட்ட மன்றங்களில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். நாடகம், இசை, நடனம் உள்ளிட்ட செயல்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட வேண்டும். வகுப்பறைகளில் மாணவர்களை 15 நாட்களுக்கு ஒரு முறை வரிசை மாற்றி அமர வைக்க வேண்டும்.
மாணவர்களின் வருகை பதிவேட்டில் அவர்களின் சாதி தொடர்பான விபரங்கள் இருக்கக் கூடாது. மாணவர்களின் சாதியை குறிப்பிட்டு ஆசிரியர் அழைப்பதோ, கருத்து தெரிவிப்பதோ இருக்கக் கூடாது. மேலும் மாணவர்களின் உதவித்தொகை குறித்த விபரங்களை வகுப்பறைகளில் அறிவிக்க கூடாது. அதேபோன்று மாணவர்கள் கைகளில் வண்ண கயிறுகள், மோதிரங்கள் அணிவதற்கு தடை. போதை பழக்கத்தால் அடிமையான மாணவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்.
பள்ளிகளில் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், 1 எஸ் எம் சி குழு உறுப்பினர் மற்றும் ஒரு பணியாளரை கொண்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு இருக்க வேண்டும். முக்கியமாக பாலியல் தொடர்பான புகார்கள் வந்தால் காவல்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் சாதிய பிரச்சனைகளை கண்காணிக்க மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.