திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப உறுப்பினர்களான செல்வி, பிரகாஷ், குப்புசாமி, கருப்பாத்தாள் ஆகியோருடன் ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றுள்ளார். பிரகாசுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இதனால் அவரது திருமண பத்திரிகையை ராமேஸ்வரத்தில் வைத்து தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே மாசாணியம்மன் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கருப்பாத்தாள்(58) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் பிரகாஷ் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.