பங்களாதேஷ் நாட்டில் உள்ள கியோர் பகுதியில், ஒருவர் தனது கடையில் உட்கார்ந்திருந்த நிலையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது அலி அசாம் மானிக் என்கிற நபர், ‘மானிக் கம்ப்யூட்டர்’ என்ற கடையை நடத்தி வந்தார்.

சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், நீல கோடுகள் கொண்ட சட்டை அணிந்திருந்த நாசிம் பூயான் என்பவர், கடையின் உள்ளே புகுந்து மானிக்கின் தாடியை பிடித்து தொடர்ச்சியாக அறைந்ததும், அந்தச் சம்பவத்தை பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்ததுமாக காணப்படுகிறது.

அந்த நேரத்தில், வெள்ளை குர்தா மற்றும் டோப்பி அணிந்திருந்த மானிக் செய்வதறியாது நின்றார். மேலும்  கம்ப்யூட்டர் மற்றும் அலுவலக பொருட்கள் இருந்த டெஸ்க்கைச் சுற்றி, சண்டை நடந்தால் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி கீழே விழுந்ததும், மானிக் கண்ணாடியை சரிசெய்து தப்பிக்க முயற்சி செய்தார், சிலர் அவருக்கு உதவ முனைந்ததுமாக காட்சிகள் பதிவாகி இருந்தன.

மேலும் தகவலின்படி, நாசிம் பூயான், அந்த கடைக்கு அடிக்கடி வந்து பணம் செலுத்தாமல் சேவைகள் கேட்டுவிட்டு போயிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அவரிடம் மானிக் பாக்கி தொகையை செலுத்துமாறு கேட்டபோது தான் இத்தகைய தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது, நாசிம், அவசர வேலை என்று கடைக்கு வந்தார். ஆனால் மானிக், காத்திருக்குமாறு கூறியதும் நாசிம் கட்டுப்பாட்டை இழந்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அவர், 15,000 டாகா மதிப்புள்ள (இந்திய ரூ.10,465) மானிட்டரை உடைத்ததோடு, கடையின் சூழலை குழப்பமானதாக மாற்றியுள்ளார். சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மானிக்கிற்கு உதவியதை தொடர்ந்து, அவர் காயமடைந்து கியோர் உபஜிலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது கியோர் போலீஸ் நிலையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இன்ஸ்பெக்டர் கொஹினூர் மியா, புகார் பெறப்பட்டிருப்பதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.