மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள அடோலி கிராமத்தில் சதீஷ் ஜடோல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் வாஷிம் என்ற பகுதியில் உள்ள சந்தைக்கு கழுத்தில் பதகை தொங்கியபடி சென்றார். அதில் “விவசாயிகளின் உடல் உறுப்புகளை வாங்குங்கள்” சிறுநீரகம் ரூ. 75000, கல்லீரல் ரூ.90,000 மற்றும் கண்கள் ரூ. 25,000 என்று எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்யும் என்று தேவேந்திர பாட்னாவிஸ் தேர்தலுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால் இப்போது கடனை விவசாயிகள் தான் அடைக்க வேண்டும் என்று கூறுகிறார். எங்களால் எப்படி முடியும். எங்களிடம் விற்க எதுவும் இல்லை. அதனால் தான் என்னுடைய உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறேன். நான் என் சிறுநீரகத்தை ரூ. 60000 விற்றேன்.

ஆனால் அது என் கடனை அடைக்க போதாது என்று எனக்கு தெரியும். அதனால் தான் என் மனைவியின் சிறுநீரகத்தை ரூ.40000, மகனின் சிறுநீரகத்தை ரூ.20,000, என் இளைய மகனின் சிறுநீரகத்தை ரூ.10000 விற்பனை செய்துள்ளேன் என்று கூறினார்.

இதற்கிடையில் அவர், தேர்தலுக்கு முன்பு தேவேந்திர பாட்னாவிஸ் கூறியபடி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இவருக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் மகாராஷ்டிரா வங்கியில் சுமார் ஒரு லட்சம் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.