
ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்தது. இந்த சோதனையின் முடிவில் விக்ரம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத் துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விதிகளின்படி அமலாக்கத்துறை அவர்களது வீட்டில் ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது என்று கூறினார்.
இதற்கிடையில் ஆதாரங்களுக்கும் நீங்கள் முன்வைக்கும் வாதத்திற்கும் ஒத்துப் போகவில்லை என்று கூறிய நீதிபதிகள் வீட்டை சீல் வைப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கிறதா என்று கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ராஜு சீல் வைப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் சீல் அகற்றப்படும் என்றும் கைப்பற்றப்பட்ட பொருள்கள் திருப்பி வைக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.