நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விவசாயத் துறையின் தண்ணீர் தேவையை சீராக பூர்த்தி செய்யும் நோக்கத்தில், மத்திய அரசு மிக முக்கியமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. விவசாய நோக்கத்திற்காக நீரை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சில மாநிலங்களில் 22 முன்னோடித் திட்டங்களை விரைவில் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சியில் மாநில அரசுகளும் இணைய உள்ளன. திட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகள் தங்களது நீர் பயன்பாட்டின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டி இருக்கும். இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.1,600 கோடியை ஒதுக்கியுள்ளது.

நீர் பயன்படுத்தும் அளவை கணக்கிட்டு வரி விதிக்க மாநில அரசுகள் அதிகாரம் பெற்றுள்ளன. “நீர் வீணாவதை கட்டுப்படுத்த, மாநிலத்தை விட உள்ளூர் நீர் பயனர் சங்கங்கள் வரியை நிர்ணயிப்பது சிறந்த வழி,” என குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் கூடுதல் செயலாளர் அசோக் கே. மீனா தெரிவித்துள்ளார். இதன் மூலம், விவசாய நிலங்களில் தண்ணீரை பொறுப்புடன் பயன்படுத்த வலியுறுத்தப்படவுள்ளது.

நிலத்தடி நீரின் தற்போதைய நிலைமை மிகுந்த கவலைக்குரியது. 239.16 பில்லியன் கன மீட்டர் அளவிலான நிலத்தடி நீரிலிருந்து 87% பகுதி விவசாய பயன்பாட்டிற்கே பயன்படுத்தப்படுகிறது.

இந்த புதிய வரி திட்டம், நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் வழிகாட்டும் என்று மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.