
தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கை விசாரித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் அதன் பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (25), அருண்குமார், அருளானந்தம் (34), பாபு (27), ஹெரன்பால் (29), மணிவண்ணன் (28), வசந்தகுமார் (27), சதீஷ் (28), சபரி ராஜன் (25) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இன்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கும் நிலையில் குற்றவாளிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் வழக்கில் 9 பெரும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தி 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நந்தினி தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறியதாவது, சாட்சிகள் பலமாக இருப்பதால் மேல்முறையீடு செய்தாலும் இந்த தண்டனை நிலைநிறுத்தப்படும் என கூறியுள்ளார்.