உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் 3000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது திண்டிவனத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்ற 37 வயது நபர் ஹைதராபாத்தில் பீல்டிங் காண்ட்ராக்டர் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு வந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் திடீரென உயிரிழந்து விட்டார். மேலும் கொரோனா தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்தது விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.