
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு மிக தீவிரமானது என்று கூறி சீமானின் மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. அதன்பிறகு இந்த வழக்கை 12 வாரங்களுக்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இது தொடர்பாக சீமானிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் சீமான் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதாவது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சீமான் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.