
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உடலுறவு வைத்துவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் கொடுத்தார். சீமானால் தான் 6 முதல் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு மிக தீவிரமானது என்றும் இந்த வழக்கை எவ்வளவு சீக்கிரத்தில் ரத்து செய்ய முடியாது என்றும் கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்தது.
அதன்பிறகு இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ள நிலையில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் சீமான் ஆஜராகவில்லை. வேறொரு நாளில் ஆஜராவதாக கூறி தன் வழக்கறிஞர்கள் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சீமான் இது தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த மனுவில் இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் விசாரணைகளையும் முறையாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என கூறிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரையில் 12 வாரத்திற்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.