
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்பு, த்ரிஷா மற்றும் நடிகை அபிராமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தக்லைப் திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்துள்ளது.
அதாவது தக்லைப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்டவிரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்ததோடு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் பேச்சு சர்ச்சையாக மாறியதன் காரணமாக நாளை திரைப்படம் ரிலீஸ் ஆகாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.