
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதில் பெண் வீட்டாரருக்கு ஆதரவாக கூலிப்படையினர் அந்தப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபரின் சகோதரரை கடத்தியதாக புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது ஜெகன் மூர்த்தி முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சிறுவன் கடத்தல் வழக்கில் அவருக்கும் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்ட நிலையில் நேற்று பிற்பகல் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது சிறுவனை கடத்திய வழக்கில் கார் கொடுத்து உதவிய ஏடிஜிபி ஜெயராமன் மீதான ஆதாரங்கள் இருப்பதால் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்திய நிலையில் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்தது. மேலும் அவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட இருக்கும் நிலையில் தற்போது காவல்துறை பரிந்துரையின்படி ஜெயராமனை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.