
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு மோதல் போக்கு என்பது அதிகரித்தது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இதனால் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக வான்வெளியில் வைத்தே தடுத்தது. அதாவது இந்தியாவின் வான் பாதுகாப்பு மையம் பாகிஸ்தான் அனுப்பிய டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானில் வைத்து முறியடித்தது. அதோடு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதற்காக அவர்களின் விமான தளங்கள் மற்றும் ராணுவத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக நடந்த தாக்குதலுக்கு பிறகு போர் ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் விரிவாக பேச இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலமாக கண்காணித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர். அதாவது இந்தியாவின் 7000 கிலோமீட்டர் கடற்பரப்பில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக நாட்டின் வடபகுதியை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் டிரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் உதவி இல்லாமல் இவற்றை செய்ய முடியாது என்பதால் செயற்கைக்கோள் மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.