
ஒடிசா மாநிலத்தில் காதலர் தினம் அன்று பாய்பிரண்டுடன் வராவிட்டால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என தனியார் கல்லூரி நிர்வாகம் ஒட்டியதாக சமூகவலைதளங்களில் வெளியான நோட்டீஸ் தற்போது வைரலாக பரவி வருகிறது. நபராங்பூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி தகவல் பலகையில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில், வரும் பிப்,.14ம் தேதி மாணவிகள் அனைவரும் கட்டாயம் தங்களது ஆண் நண்பருடன் கல்லூரிக்கு வர வேண்டும்.
அவ்வாறு பாய் பிரண்டுடன் வராத மாணவிகளுக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட மாட்டாது. மாணவிகளின் பாதுகாப்பு கருதி ஆண் நண்பருடன் வர அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பாய்பிரண்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கல்லூரி வாசலில் காண்பிக்க வேண்டும். அந்த புகைப்படங்கள் அடையாள அட்டைக்கு இணையாக கருதப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அனைத்துக்கும் மேலாக நோட்டீசில் கல்லூரி தலைமை ஆசிரியரின் கையொப்பம் இடப்பட்டு இருந்ததால் அது உண்மையானது என நம்பினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை ஆசிரியை, நோட்டீஸ் போலியானது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் போலியாக ஒரு நோட்டீசை தயாரித்து கல்லூரி தகவல் பலகையில் ஒட்டியதாக தெரிவித்தார். இந்த விஷயத்தை காவல்துறை வரை கொண்டுசென்று பெரிய பிரச்சனையாக்க விரும்பிவில்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது